Saturday, March 01, 2014

முல்லையில் மனித எலும்புக்கூடுகள், பாய்கள், அடையாள அட்டை மீட்பு !

முல்லைத்தீவு, உடையார்க்கட்டு 200 வீட்டுத்திட்டப் பகுதியிலுள்ள காணியிலிருந்து 9 பேருடைய மனித எச்சங்களும் அந்த எச்சங்களைச் சுற்றியுள்ள நிலையில் 9 பாய்களும், ஒருவரின் அடையாள அட்டையும் மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் விவசாயி ஒருவர் விவசாயம் செய்வதற்காக நிலத்தினைப் பண்படுத்திய போது, நிலத்தினுள் மண்டையோடு இருப்பதை அவதானித்துள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.


தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் தங்கராஜா பரஞ்சோதி, யாழ்.மாவட்ட சட்ட மருந்துவ அதிகாரி சின்னையா சிவரூபன் ஆகியோக்ர் முன்னிலையில் குறித்த நிலம் தோண்டப்பட்டது. இதன்போது 9 பேருடைய மனித எச்சங்களை மீட்டு, மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த யாழ். மாவட்ட சட்ட மருந்துவ அதிகாரி சின்னையா சிவரூபன், குறித்த விவசாய நிலத்தில் மனித எச்சங்கள் இருப்பதாக எனக்கு நேற்று (27) மாலை தகவல் கிடைத்ததையடுத்து, இன்றைய தினம் இந்த மீட்பு பணிகள் இடம்பெற்றது என்றார். மீட்கப்பட்ட 9 பேருடைய மனித எச்சங்களுடன் தேசிய அடையாள அட்டை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த தேசிய அடையாள அட்டையினை பொலிஸாரிடம் ஒப்டைத்துள்ளோம்.

அந்த அடையாள அட்டை மூலம் இறந்தவர் யார் என அடையாளம் காணக்கூடியதாக இருக்கும் எனவும் கூறினார். அத்துடன், இவர்கள் யுத்தத்தில் இறந்திருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.


No comments:

Post a Comment